கிரானைட் குவாரிகளில் நரபலிகள்: உடல்களை தோண்ட போலீஸ் ஒத்துழைக்க மறுப்பு- இடுகாட்டில் சகாயம் தர்ணா!!
மதுரை : மேலூர் அருகே கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அங்குள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்ட போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இடுகாட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, சந்தேகத்திற்கிடமான உடல்களை தோண்டி எடுக்க ஏற்பாடுகளை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சகாயம் குழுவினர் "எவ்வளவு நேரமானாலும் தோண்டும் பணியை முடிக்காமல் இந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை எனக் கூறி அங்கேயே முகாமிட்டனர்.
இடுகாடு பகுதியான அங்கு நாற்காலிகளை போட்டு சகாயம் உள்ளிட்ட அதிகாரிகள் உட்கார்ந்துவிட்டனர். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரியப்பனிடம், சகாயம் பேசும்போது, "இங்கு ஒரு கி.மீ. தூரத்துக்கு கற்களை வெட்டி எடுத்து மலையையே காணாமல் செய்து இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் இங்கு சிறிது ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள உடல்களை தோண்டி எடுப்பது சிரமமான வேலையா? வீண் காலதாமதம் செய்வதை தவிர்த்து துரித நடவடிக்கை எடுத்து உடல்களை தோண்டுங்கள்" என கோபமாக கூறினார்.
இதுபற்றிய தகவல் அறிந்து சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்களும் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.