நீட்டை தான் கட்டாயப்படுத்தினீங்க... தேர்வு மையத்தையாவது அதிகரிக்கலாமே?
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்திய நிலையில் தேர்வு மையங்களையாவது 100 கி.மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் அமைத்திருக்கலாமே என்று பெற்றோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
சென்னை : மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத வந்து செல்லும் தேர்வு மையங்களையாவது அதிகரிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள் மட்டுமே உள்ள நிலையில் 100 கி.மீட்டருக்கு ஒரு நீட் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பெற்றோர்.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது கடந்த ஆண்டு முதல் நீட் தகுதித் தேர்வு முறையில் நிரப்பப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படும் நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரும் பாதிப்பை தருகிறது.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு பறிக்கிறது என்று கண்டனக்குரல்கள் எழுந்தன. ஆனால் இதனால் எந்த பயனும் இல்லை இரண்டாவது ஆண்டாக மே 6ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன
கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் நாடு முழுவதும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 9.

புதுச்சேரியில் ஒரே ஒரு மையம்
நீட் தேர்வுக்காக முழுவதும் உள்ள தேர்வு நடைபெற உள்ள மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என 10 தேர்வு மையங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கம்மம், ரங்காரெட்டி தெலங்கானாவில் இருக்கிறது. ஆனால் அதனை ஏன் தமிழக தேர்வு மைய பட்டியலில் சேர்த்துள்ளார்கள் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.
10 மட்டும் போதாது
இது ஒரு புறம் என்றால் சுமார் 2 ஆயிரத்து 650 இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக நீட் தேர்வு எழுத ஏறத்தாழ லட்சக்கணக்கில் மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான தேர்வு மையங்கள் மட்டும் 10 என்ற அளவிலேயே இருக்கிறது.

தேர்வு மையத்தை அதிகரிக்க வேண்டும்
அதிலும் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் இருப்பதால் கிராமப்புறங்களில் இருந்து தேர்வு எழுத வரும் பின்தங்கிய மாணவர்களுக்கு இது கூடுதல் சிரமமாகத் தான் இருக்கும். எப்படியோ நீட் தேர்வை ஆண்டு முழுவதும் கட்டாயப்படுத்தி விட்ட நிலையில் தேர்வு மையங்களையாவது 100 கி.மீட்டருக்கு ஒரு தேர்வு மையம் என்ற அளவில் அதிகரிக்கக் கூடாதா என்று பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications