ஓபிஎஸ் அணிக்கு அடுத்த எம்எல்ஏ ரெடி...எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த சூலூர் எம்எல்ஏ!
கோவையில் உள்ள கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வேறு அணிக்கு மாறிவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூலூர்: கோவையில் உள்ள கல்குவாரியில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அணி மாறிவிடுவதாக சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பெரியகுயிலில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் காயமடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தில் கல்குவாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்குவாரியை எம்எல்ஏ கனகராஜ் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கல்குவாரியில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்ய வில்லை.
இந்த பிரச்சினையில் கல் குவாரி உரிமையாளர்கள் யாரும் வரவில்லை. கல்குவாரியை சுத்தம் செய்து அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோரிடம வலியுறுத்துவேன்.
எனது கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை எனில் எடப்பாடி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு மாறிவிடுவேன். நான் ஒரு மாதிரியான ஆளு. மக்களுக்கு பணியாற்றவே எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
அதை செய்ய முடியவில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்யக் கூட தயங்கமாட்டேன் என்றார் அவர்.
எடப்பாடி அணியிலிருந்து இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் தாவினால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற நிலையில் சூலூர் எம்எல்ஏ-வின் மிரட்டலால் சசிகலா தரப்பு நிச்சயம் ஆடி போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications