ரஜினி ஆட்சிக்கு வந்தால் அது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவே இருக்கும்: திருமாவளவன் தடாலடி
ரஜினி ஆட்சிக்கு வந்தால் அது நேரடி ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவே இருக்கும் என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தனிக்கட்சி ஆரம்பித்து ஒருவேளை ஜெயித்து ரஜினி ஆட்சிக்கு வந்தால் அது நிச்சயம் நேரடி ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவே இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
சென்னையில் உள்ள பெரியார் திடல் எம்.ஆர்.ராதா அரங்கில், தி.க தலைவர் கி.வீரமணி எழுதிய அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் களம் வேதனை தருவதாக மாறி வருகிறது. அதற்கு ஏற்றாற் போல தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் இந்த வேதனையை அதிகப்படுத்துவது போல இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான நாளில், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் என்று ரஜினி குறிப்பிட்டதை அடுத்தே வாழ்த்து தெரிவித்தாகவும், ஆனால் பிறகு அது ஆன்மிக அரசியல் என்று சொன்னதில் இருந்தே அவரது அரசியல் கொள்கை என்னவென்று தனக்கு விளங்கியதாவும் தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதற்கு முன் மந்த்ராலயம் போனது, அறிவிப்புக்கு பின் ராமகிருஷ்ண மடம் சென்றது இவை எல்லாம் வைத்து பார்க்கும்போதும், சோ இருந்து இருந்தால் தனக்கு 1000 யானை பலம் கிடைத்து இருக்கும் என்று சொன்னதை வைத்தும் ரஜினி கொள்கை என்று எதை சொல்கிறார் என்று தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம், ரஜினி கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று ஒருவேளை முதல்வர் ஆகி விட்டால் அப்போது அமையும் ஆட்சி இந்து மதத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி ஆட்சியாக இருக்கும் என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.