சட்ட விரோதமாக மது விற்பனை நெல்லை அருகே 3 பேர் அதிரடி கைது
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் எஸ்ஐ அகிலா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வி.கே.புரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் முருகன், வி.கே.புரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சங்கர்கணேஷ், கொட்டாரம் அடிவாரத்தைச் சார்ந்த முருகன் மகன் ராஜீ ஆகிய மூவரை போலீஸ்சார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்கள் எங்கிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான ஊர்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டதால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள், வேறு இடத்தில் மது கடைகளை திறக்கவும் பொதுமக்கள் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருவதால் இப்படி சட்டவிரோதமாக மது விற்பனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications