விமான நிலையத்தில் அப்பாவி பெண்ணைக் கைது செய்த வழக்கு... ஹைகோர்ட்டில் ஆஜரான குடியுரிமை அதிகாரி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அப்பாவிப் பெண் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவத்தில் விமான நிலைய குடியுரிமை அதிகாரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை சேலையூரை சேர்ந்த கேவீன் ஜான் சஜித் என்பவர் தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், "என் தாயார் சாரா தாமஸ் வெளி நாட்டில் இருந்து கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார்.
அவரை அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் , கேரளா மாநிலம் புனலூர் போலீசார், சென்னை விமான நிலையம் போலீசார் ஆகியோர் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்து விட்டனர்.
அப்போது என் தாயார் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் என் தாயார் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை. அவரை சட்டவிரோதமாக ஜெயிலில் அடைத்துள்ளனர்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி புனலூர் குற்றவியல் கோர்ட்டில் சாரா தாமஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை என்றும் கிரிமினல் வழக்கில் தேடப்படும் சாரா வில்லியம்ஸ் என்ற பெண்ணை கைது செய்வதற்கு பதில் சாரா தாமசை போலீசார் கைது செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை புனலூர் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சாரா தாமஸ் மகன் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.மதிவாணன் ஆகியோர், சாரா தாமசை போலீசார் கைது செய்ததற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் மூத்த குடியுரிமை அதிகாரிதான் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. எனவே, அந்த மூத்த குடியுரிமை அதிகாரி நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மூத்த குடியுரிமை அதிகாரி ஆர்.என்.சிங் நேரில் ஆஜரானார்.
அவர்தான் மூத்த குடியுரிமை அதிகாரி என்பதை உறுதி செய்யும் விதமாக அவர் பிரமாணப் பத்திரத்துடன் இந்த வழக்கிற்கு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதன் பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.