பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சியை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம்-வாசனுக்கு ஈ.வி.கே.எஸ் சுளீர்!
சென்னை: மக்கள் பிரச்சினையை முன்வைத்து இயங்கிவரும் காங்கிரஸ் கட்சி 47 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 2016-ம் ஆண்டு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை தர உள்ளது. இல்லையென்றால் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். பதவியில் இருந்து சுகத்தை அனுபவித்துவிட்டு, பதவி போன பிறகு கட்சியை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி, கட்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், நேற்று பகல் 12 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ, பதவி வரலாம், போகலாம். ஆனால் மக்கள் பணி செய்யவே விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர் என்று ஜி.கே.வாசனை நினைத்து இருந்தேன். அவர் புதுக்கட்சி தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டதை என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.
சோதனையான காலத்தில் கட்சியை விட்டு பிரிந்து செல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக ஆட்சியை பிடிக்க இருக்கும் நேரத்தில் ஜி.கே.வாசன் புதிய கட்சியை தொடங்கியிருப்பது சரியான அணுகுமுறை இல்லை என்றார் பிரின்ஸ் எம்.எல்.ஏ.
பாரம்பரியமான கட்சி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் பாரம்பரியமான கட்சி. ஜி.கே.வாசன் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடன் அனைத்து காங்கிரசாரும் சென்று விட்டனர் என்று கூறுவது தவறு என்றார்.
380 முன்னாள் எம்.எல்.ஏக்கள்
400 முன்னாள் எம்.எல்.ஏ.க்களில், 380 பேர் எங்களிடம் தான் உள்ளனர். ஒருவர், இருவர் அதாவது எண்ணக்கூடிய அளவில் தான் அந்தபக்கம் போய் இருக்கலாம். எனவே அந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
சந்தர்ப்பவாதிகள்
பொதுவாக கட்சி ஆட்சியில் இருக்கும் போது பதவியிலிருந்து சுகத்தை அனுபவித்துவிட்டு, பதவி போன பிறகு கட்சியை விமர்சிப்பது சந்தர்ப்பவாதமாகும்.
கடலில் மூழ்கும் கப்பலா?
காங்கிரஸ் கடலில் மூழ்கும் கப்பல் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி உள்ளார். அவர் பாஜகவில் இருப்பதால், அப்படித்தான் பேச வேண்டும்.
பன்னீரை நினைத்தால்
தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்தவரையில் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு நல்ல மனிதர். அவரால் தனித்து செயல்பட முடியாததை நினைக்கும் போது பாவமாக இருக்கிறது.
ஞானதேசிகன் போலவே
மக்கள் பிரச்சினைக்காக முன்னாள் தலைவர் ஞானதேசிகன் என்ன கருத்தை வெளியிட்டாரோ, அதே கருத்து தான் என்னுடைய கருத்தாகும்.
2016ல் காமராஜர் ஆட்சி
மக்கள் பிரச்சினையை முன்வைத்து இயங்கிவரும் காங்கிரஸ் கட்சி 47 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 2016-ம் ஆண்டு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை தர உள்ளது. இல்லையென்றால் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகும் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.