அம்மாடி.. இவ்ளோ பேரு தீபாவளிக்கு ஊருக்குப்போறாங்களா!
தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்களுக்கு ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை: தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்களுக்கு ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் புதன் கிழமை கொண்டாடப்படுகிறுது. இதற்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 11,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் சிறப்பு பஸ்கள் 5 இடங்களில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் முன்பதிவு
கோயம்பேடு, அண்ணா நகர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தாம்பரம் சாணிடோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து நாளை முதல் 17-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 முன்பதிவு கவுண்டர்கள், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும், தாம்பரம் சாணிடோரியத்தில் 2 கவுண்டரும் திறக்கப்பட்டுள்ளன.பிற மாவட்டங்களிலும் முன்பதிவு மையங்களில் வரிசையில் நின்று மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
சென்னையில் இருந்து
நேற்று காலை முதல் இன்று காலை 9.30 மணி வரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 67,738 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்தனர்.
பிற மாவட்டங்களிலும்
13-ந்தேதி தமிழகம் முழுவதும் 19,739 பேரும் சென்னையில் இருந்து செல்ல 9,566 பேரும் முன் பதிவு செய்துள்ளனர். 14-ந்தேதி சென்னையில் இருந்து 9,540 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள் 17,534 பேரும் டிக்கெட் பெற்றுள்ளனர்.
நாட்கள் முன்பதிவு
15-ந்தேதி பயணம் செய்வதற்கு 15,071 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து செல்ல 7,607 பேர் டிக்கெட் பெற்றுள்ளனர். 16-ந்தேதி 31,284 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
17ஆம் தேதி கூட்டம்
இதில் சென்னையில் இருந்து செல்ல 19,973 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.17-ந்தேதி பயணம் செய்ய 32,461 பேர் முன்பதிவு செய்ததில் சென்னையில் இருந்து மட்டும் முன்பதிவு செய்தவர்கள் 21,052 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.