ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு... சென்னை உட்பட தமிழகம் முழுக்க இன்று ஹோட்டல்கள் ஸ்டிரைக்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக ஹோட்டல்களை மூடி, உரிமையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஹோட்டல்களுக்கு ஏசி வசதி இருந்தால் கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கச் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்தச் சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜிஎஸ்டி வரி நான்கு அடுக்காக 5, 12, 18, 28 சதவீதம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்புக்கு வணிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் வெங்கடசுப்பு கூறுகையில், " இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் சிறிய உணவகங்களுக்கு தற்போது அரை சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்களிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் வசூலிப்பதில்லை.
அந்தந்த ஹோட்டல்களே வரிச்சுமையை ஏற்று வந்தன. ஆனால், தற்போது ஜிஎஸ்டியால் உணவகங்களுக்கு வரிச்சுமை 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 10 மடங்கு அதிகம். அதேபோல ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது.
இதற்கு தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 6 மடங்கு அதிகம். மேலும் ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி 2 சதவீதம், மத்திய அரசின் சேவை வரி 6 சதவீதம் என 8 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு உயர்வான வரியை நாங்கள் செலுத்த முடியாது.
இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை வரும். அதாவது ரூ.100க்கு உணவு சாப்பிட்டாலே ரூ.118 கட்டணம் வசூலிக்க வேண்டும். மத்திய அரசு இந்த வரி உயர்வைத் திரும்ப பெற வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கையின் மீது மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஹோட்டல்கள் இயங்காது. சென்னையில் மட்டும் 15,000 ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும். இந்தப் போராட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களும் பங்கேற்கின்றன. தென்மாநிலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் ஹோட்டல்கள் மூடப்படும்.
மீண்டும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய அரசு வருகிற ஜூன் 3ம் தேதி கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பிறகும் ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்காவிட்டால் இந்தியா முழுவதும் ஹோட்டல்களை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில், நாங்கள் ஈடுபடுவோம்." என்று தெரிவித்தார்.