நெல்லை: தொடரும் மாணவர்கள் அறப்போர்.. கல்லூரி நிர்வாகத்தை போலீஸ் மிரட்டல்?
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகளில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக கல்லூரி நிர்வாகத்தை போலீசார் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
நெல்லை: நெல்லை மாவட்ட கல்லூரிகளில் 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும் 'நீட்' தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களையும் மாணவர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேட்டை ஐடிஐ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
அதுமட்டுமில்லாமல், சங்கரன்கோவில் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஓப்பாரி வைத்து போராடி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக நெல்லை மாவட்ட கல்லூரிகளில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தை போலீசார் 'போராட்டத்தை தடுக்க வேண்டும்' எனக் கூறி மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.