6 அதிகாரிகள்.. விடிய விடிய நடந்த சோதனை.. விஜயிடம் இரவு முழுக்க வருமான வரித்துறை விடாமல் விசாரணை!
நடிகர் விஜய்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுக்க சோதனை நடத்தினார்கள்.
சென்னை: நடிகர் விஜய்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுக்க சோதனை நடத்தினார்கள். விடிய விடிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 15க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது நடிகர் விஜயிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
சோதனை
இந்த விசாரணையை அடுத்து பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தியாகராய நகர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் இருவரிடமும் பல கோடிக்கு கணக்கில் வராத பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். நேற்று தொடங்கிய விசாரணை இன்னும் முடியாமல் நடந்து வருகிறது.
மாஸ்டர்
இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரிடம் நேரில் சம்மன் அனுப்பினார்கள். அதோடு தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார். தங்கள் உடன் அவரை வர சொல்லி அழைத்து வந்தனர். இதையடுத்து விஜய் தன்னுடைய காரில் தனியாக வந்தார். ஆனால் விஜயின் காரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இருந்தனர்.
எப்போது
நேற்று மாலை 4.30 மணி அளவில் சரியாக விஜயுடன் விசாரணை தொடங்கியது. முதலில் விஜய்யின் பண்ணை வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தினார்கள். அவருக்கு சொந்தமான மற்ற வீடுகளிலும் சோதனை நடந்தது. மற்ற வீடுகளில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் விஜய்யை அவரின் பண்ணை வீட்டில் வைத்து விசாரணை செய்தனர்.
இன்னும் முடியவில்லை
இரவு 8.45 மணிக்கு விஜயை அவரின் பண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தனர். அங்கு வந்த பின் அவரின் பிகில் படம் குறித்து விசாரணை செய்தனர். அதில் அவர் வாங்கிய சம்பளம், தொகை, வசூல் எல்லாம் குறித்து கேள்விகள் கேட்டனர். அவரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு முழுக்க விஜயின் வீட்டில் சோதனை நடந்தது. தற்போது அவரின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.