வாட்ஸ்அப்பில் வந்த வதந்தி.. மதுரை கூட்டுறவு வங்கி முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள்!
மதுரை தபால் நிலையம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மதியம் 3 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது.
மதுரை: மதுரை தபால் நிலையம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மதியம் 3 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது.
இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் அந்த வங்கியின் முன்பு கேமிரா சகிதமாக குவிந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் வங்கியின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த மாதிரியான வாகனங்கள் தென்படாததால் சந்தேகமடைந்தனர். இது குறித்து வங்கியில் இருந்த தலைவர் புதூர் துரைப்பாண்டியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறிய அவர், ரெய்டு என வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர் என்றார்.
இதைத்தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், உயர் அதிகாரிகள் வங்கிக்கு வந்தனர். அவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் அதற்கு முந்தைய பரிமாற்றம் தொடர்பான விவரங்களையும் வாங்கிச் சென்றனர் என்றார்.
வதந்திக்குள்ளான வங்கியில் ஒரே நாளில் ரூபாய் 7.5 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் ஆளும் கட்சி அமைச்சருக்கு சொந்தமானது என்ற தகவல் அறிந்த உயர் அதிகாரிகள்,
இதுகுறித்து ஆய்வு செய்ய கம்ப்யூட்டர் பதிவுகளை வாங்கிச் சென்றதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், சேலம், கடலூர் கூட்டுறவு வங்கிகளில் நடந்த சோதனை மற்றும் மதுரை கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.