கையில் மை.. தினம் ஒரு உத்தரவு.. மக்களை கஷ்டப்படுத்தும் மத்திய அரசு.. திருநாவுக்கரசர் கண்டனம்
தினம் ஒரு உத்தரவு போட்டு மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்று திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தினம் ஒரு உத்தரவு போட்டு மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து மக்கள் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பழைய நோட்டுகளை நீண்ட வரிசையில் நின்று பழைய நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். மேலும், ஏடிஎம் மையங்களும் முழுமையாக செயல்பாடாமல் இருப்பதால் திறந்திருக்கும் சில ஏடிஎம் மையங்களில் மக்கள் இரவும் பகலுமாக காத்துக்கிடக்கிறார்கள்.

பணத்தை எடுக்கவே நீண்ட வரிசையில் இருக்கும் மக்களுக்கு இனி பணத்தை மாற்றியதற்கான அடையாளமாக இன்றிலிருந்து கையில் அழியாத மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இதுகுறித்து பேசும்போது, "தினம் தினம் ஒரு உத்தரவு போட்டு சாதாரண மக்கள் மீது அரசு சுமையை ஏற்றி வருகிறது. அது ஏன் என்பது தெரியவில்லை. இந்த மை எத்தனை நாட்கள் கையில் இருக்கும். மீண்டும் எப்போது பணம் எடுக்கப் போகலாம் என்பது குறித்தெல்லாம் ஒரு தெளிவும் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கை, முதுகு என மை வைத்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் தீர்வு" என்று கூறியுள்ளார்.
ஒருவரே திரும்ப திரும்ப வங்கிகளுக்குச் சென்று பழைய நோட்டுக்களை மாற்றி வருவதாகவும், இதனை தடுக்கவே பணத்தை மாற்றுவோர் கையில் அழியாத மை வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாய் தெரிவித்துள்ளார். என்றாலும், ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிச் செல்லும் மக்களுக்கு இது புதிய தலைவலியாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications