நாட்டிலேயே முதன்முறையாக பொதுத் தேர்வெழுதிய திருநங்கை தாரிகா வெற்றி பெற்று சாதனை!
நாட்டிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதிய திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை : சென்னையை அடுத்த அம்பத்தூர் அரசுப் பள்ளியில் பயின்று வந்த திருநங்கை தாரிகா பானு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இவர்களுடன் திருநங்கை ஒருவரும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால் அவர் தற்போது மீடியா வெளிச்சத்திற்குள் வந்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலரின் அனுமதியோடு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்லப்படும் திருநங்கை தாரிகாபானு மேல்நிலைப் படிப்பிற்காக பள்ளியில் சேர்ந்தார். பொதுத் தேர்வில் தாரிகா பானு வெற்றி பெற்றதை சக மாணவிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் தாரிகா.
நாட்டிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வில் பங்குபெற்று தேர்ச்சி பெற்ற மாணவி என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தாரிகா தெரிவித்தார். திருநங்ககைகள் பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்கவும் மட்டுமே செய்வார்கள் என்பதை மாற்றவே கடுமையான போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மருத்துவம் சேர்ந்து படிக்கவே தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்ர.
மூன்றாம் பாலின மாணவர்களை சேர்த்துக் கொள்ள தங்கள் பள்ளி எப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பள்ளியின் தலைமைஆசிரியர் நெகிழ்ந்தார். சம மாணவிகள் திருநங்கை தாரிகாவை பாகுபாடின்றி நடத்தியதோடு ஆசிரியர்களும் வேறுபாடுகளின்றி பாடம் பயிற்றுவித்ததன் விளைவாகவே திருநங்கை மாணவி தாரிகா பானு வெற்றியை எட்ட முடிந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.