இலங்கை ராணுவ கருத்தரங்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தி. வேல்முருகன்
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்கில் இந்தியாவைச் சேர்ந்த எவரும் பங்கேற்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி முதல் 20ந் தேதி வரை சர்வதேச ராணுவ கருத்தரங்கு ஒன்றை நடத்த இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டும் தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இக்கருத்தரங்கில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது சிங்களப் பேரினவாத அரசு. சர்வதேச நாடுகள் தடை செய்த அத்தனை ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி தமிழினத்தை அழித்த போர்க்குற்றவாளிதான் இலங்கை அரசு.
மனித குலம் மன்னிக்க முடியாத போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்ற கூண்டிலேற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழினமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.. கடந்த 5 ஆண்டுகாலம ஒட்டுமொத்த தமிழகமே போர்க்குரல் எழுப்பி வருகிறது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
ஆனால் தமிழகத்தின், தமிழினத்தின் உணர்வுகளைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல், கிள்ளுக்கீரையாக நினைத்து ராஜபக்சேவுடன் இந்திய மத்திய அரசு நெருக்கம் பாராட்டி வருகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எத்தகைய துரோகத்தை தமிழினத்துக்கு இழைத்ததோ அதற்கு சற்றும் குறைவில்லை என்கிற வகையில்தான் தற்போதைய பாரதிய ஜனதா அரசும் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழு இலங்கைக்கு சென்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசியது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச ராணுவ கருத்தரங்கிலும் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொள்வதாக கூறி இருக்கிறார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த திமிர்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கையுடன் எந்த ஒரு உறவுமே வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழகமே குரல் கொடுக்கும் நிலையில் இறுமாப்புடன் செயல்படும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை நடத்தும் சர்வதேச ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவருமே கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அம்மா அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.வேல்முருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.