சென்னைக்கு இட்லி, பெங்களூருக்கு தோசை.. பெருநகர மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிகள் இவைதான்!
சென்னை: இந்தியாவின் பெருநகரங்களில் மக்கள் விரும்பி சாப்பிடும் காலை உணவு எது என்பது குறித்து சுவையான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும் ஸ்விக்கி செல்போன் ஆப் நிறுவனம், இந்த சர்வேயில் ஈடுபட்டுள்ளது. சென்னை, பெங்களூர், புனே, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இந்த சர்வே நடத்தியுள்ளது ஸ்விக்கி.
மொத்தம் 8 மெட்ரோ நகரங்களில் 12 ஆயிரம் ரெஸ்டாரண்டுகளில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ரெஸ்டாரண்டுகளில் காலை உணவாக எந்த உணவு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பதை வைத்து முடிவுகள் அறியப்பட்டுள்ளன.
பாரம்பரியம்
இந்த ஆய்வில் தெரிய வந்த ஒரு விஷயம், இந்தியர்கள் தங்கள் உணவு வழக்கத்தில் மேற்கத்திய நாடுகளை பின்பற்றுவதில்லை என்பதுதான். தங்கள் பாரம்பரிய உணவில்தான் அவர்கள் அதிக ஆசை வைத்துள்ளனர்.
தோசையம்மா தோசை
இதற்கு உதாரணம் என்ன தெரியுமா? பெரும்பாலான மக்கள் காலை உணவாக ஆர்டர் செய்வது தோசைதானாம். ஆம், நமது பாட்டிகள், அம்மாக்கள் சுட்டுத் தந்த அதே தோசைதான். ரெஸ்டாரண்டுகளில் அந்த தோசை, சாம்பார், விதவிதமான சட்னியுடன் பரிமாறப்படுவதால் மக்களுக்கு அதில் ஆர்வம்.
தேசிய உணவு
தென் இந்தியர்கள்தான் தோசை பிரியர்கள், அதிலும் கர்நாடகா மற்றும் தமிழகத்து மக்கள்தான் மசால்தோசை உள்ளிட்ட தோசைகள் மீது பிரியம் கொண்டவர்கள் என்ற பொது கருத்தையும் இந்த ஆய்வு தகர்த்துள்ளது. டெல்லியில் கூட கணிசமான வாடிக்கையாளர்கள் தோசையை ஆர்டர் செய்து அசத்தியுள்ளனர்.
ச்லோக்கே பூரி கியாகே
டெல்லியை பொறுத்தளவில், ச்சோலே பச்சர் எனப்படும், பூரி-கொண்டைக்கடலை மசாலா காம்பினேஷன்தான் அதிக மக்களால் ஆர்டர் செய்யப்பட்ட பிரேக்-பாஸ்ட். பரோட்டா 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்தை பிடித்துள்ளது தென் இந்திய ராஜாவான தோசைதான்.
பன்னு டீ ராமசாமி
மும்பைக்கர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்வது பன் மஸ்கா. அத்தோடு தேவைப்படும் மசாலாக்களை ஆர்டர் செய்கிறார்கள். இதையடுத்து மசாலா மற்றும் பிளேன் தோசைகளும் ஆர்டர் செய்யப்படுகின்றன. வடா பாவ் சாப்பிடுவதில் மும்பைக்காரர்கள் ஃபேமஸ் ஆயிற்றே. எனவே இங்க பன் மஸ்காவுக்கு முதலிடம்.
ஆவி பறக்க அடடா
சென்னையை பொறுத்தளவில், இது இட்லியின் தலைநகர். இங்கு இட்லிதான் அதிகம் ஆர்டர் செய்யப்படுகிறது. 2வது இடம் பிளேன் தோசைக்கு. 3வது இடமும் இட்லிக்குதான். ஆனால், நெய் பொடி இட்லி ஆர்டர் செய்கிறார்கள். பெங்களூர்தான் அதிக அளவில் காலை உணவு ஆர்டர் செய்யும் நகரமாகும். இங்கு மசால் தோசைதான் மன்னன். அவலில் செய்யப்படும் காரவகை உணவு டாப்3 இடத்திற்குள் வருகிறது.
நிஜாம் மண் வழி தனி வழி
இந்த பட்டியலில் ஹைதராபாத் மட்டுமே வேறு வகையான உணவு கலாசாரம் கொண்டுள்ளது. அங்கு, பிரெட் லுக்மி, ஸ்பேனிஷ் ஆம்லெட், சிக்கன் சான்ட்விஜ் அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.