ஐ.ஓ.பி. வங்கியில் சட்டவிரோத பணி விவகாரம்: முன்னாள் தலைமை இயக்குநர் நரேந்திராவும் சிக்குகிறார்?
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தகுதி ஏதும் இல்லாமல் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பணி நியமனம் செய்த மோசடி வழக்கில் வங்கியின் முன்னாள் தலைமை இயக்குநர் நரேந்திராவும் சிபிஐயால் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 950 பேர் தகுதி ஏதும் இல்லாமல் சட்டவிரோதமாக துப்புரவு பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருவதாக புகார் கிளம்பியது. இது தொடர்பாக சிபிஐ நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த மே மாதம் சோதனையும் நடத்தியது.
இந்த மோசடியில் பல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினருக்கு (ஏ.ஐ.ஓ.பி.இ.யு.) முக்கிய பங்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், தொழிற்சங்கத்தினர் பலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பின்னர் அவ்வப்போது கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
இதுவரை இந்த மோசடி வழக்கில் வங்கிப் பணியாளர்கள் வேலூர் உமாபதி, சேலம் கந்தசாமி, பாண்டிச்சேரி சௌந்தர ராஜன், புதுக்கோட்டை ரங்கராஜன், தூத்துக்குடி தாமஸ் பாலன், தஞ்சாவூர் சுவாமிநாதன், சென்னை சென்னிகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் மற்றும் தொழிற்சங்கமான ஏ.ஐ.ஓ.பி.இ.யு.வின் பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை தலைமை அலுவலகத்தின் டி.ஜி.எம்.ரஷித் கான், ஜி.எம்.காந்தி, ஏ.ஜி.எம். ராமச்சந்திரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவ்வளவு பெரிய மோசடிக்கும் ஓய்வுபெற்ற பின்னரும் தொழிற்சங்கத் தலைவராக தொடர்ந்து நீடித்து வரும் பாலசுப்பிரமணியனே காரணம் என்பதும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக பாலசுப்பிரமணியனை கண்காணித்து வந்த சிபிஐ கடந்த 4-ந் தேதியன்று அவரையும் சென்னையில் கைது செய்தது.
பொதுவாக எங்கே சிக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஏராளமான ஆதாரங்களை வங்கி அதிகாரிகளும் தொழிற்சங்கத்தினரும் விட்டு வைத்திருந்ததுதான் இந்த வழக்கில் சிபிஐ விறுவிறுவென முன்னேறக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய நாகை ஸ்டீபன் என்ற வங்கி அதிகாரி கணக்கில் 63,48,441 ரூபாயும், அவரின் மனைவி கணக்கில் 17,53,027 ரூபாயும், படிக்கின்ற அவரின் மகன் கணக்கில் 39,71,173 ரூபாயும் இருந்தது. சேலம் கந்தசாமியின் 72 வயது மாமியார் வங்கி கணக்கில் மட்டும் சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் இருந்துள்ளது.
இப்படி ஏராளமான ஆதாரங்கள் கிடைத்த பின்னர்தான் சிபிஐ கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. கைது செய்யப்பட்ட அனைவருமே தொழிற்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தை கைகாட்டவே அவருக்கு எதிராகவும் ஆதாரங்கள் வசமாக சிக்க அமுக்கியுள்ளது சிபிஐ.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் இட்லிக்கடை நடத்தி பாலசுப்ரமணியன் மெல்ல ஐ.ஓ.பி,க்குள் சிறப்பு பிரிவு ஊழியராக சட்டவிரோதமாக நுழைந்து இன்று மிகப் பெரிய மோசடி மன்னனாக உருவெடுத்திருக்கிறார். தகுதி இல்லாதவர்கள், தன் வீட்டில் வேலையாட்களாக இருந்தவர்கள் என பலருக்கும் முறைகேடாக பணி நியமனத்துக்கு உதவியிருக்கிறார் பாலசுப்பிரமணியன். தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் பரிந்துரைத்தவர்களுக்கும் பணி நியமனத்துக்கு வழி செய்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். ஐ.ஓ.பி. தொழிற்சங்கத்தின் பல நூறு கோடி சொத்துகளையும் பாலசுப்பிரமணியம் தன் வசம் கையகப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிபிஐ வலையில் அடுத்து சிக்க இருப்பது வங்கியின் முன்னாள் தலைமை இயக்குநர் நரேந்திராவாம். இவரைப் பற்றி பாலசுப்பிரமணியன் ஏராளமான தகவல்களை சிபிஐயிடம் தெரிவித்திருக்கிறாராம். இதனால் எந்த நேரத்திலும் நாகேந்திராவும் கைது செய்யப்படலாம் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.