அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த அரசியல்வாதி குமரிஅனந்தனை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவர் அரசியல் பொது வாழ்க்கையில் முன்னோடியாக இருக்கிறார். தனது மகள், பேரன், பேத்தி அனைவரும் மருத்துவர்கள், சகோதரரும் மிகப்பெரிய வணிக நிறுவனம் நடத்தி வருபவர். ஆனால் பகட்டாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான குமரிஅனந்தனை பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி, தென்சென்னை மாவட்ட மருத்துவரணி செயலாளர் லாக்நகர் யூசுப், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.