வர்தா புயல் பாதிப்பு.. நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் சென்னைக்கு வந்தது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க 2 கப்பல்கள் சென்னைக்கு வந்தது
சென்னை: வர்தா புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் கத்மட் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது.
வர்தா புயல் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. அப்போது 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்தப் புயலின் வேகத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்காக கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் கத்மட் என்ற இரு கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன.
உணவு, ஆடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை இந்தக் கப்பல்களில் எடுத்து வரப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவிப் போன்ற சிகிச்சைகளை செய்வதற்காக மருத்துவர்கள் குழுவும் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications