அடையாறு கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்... மிரட்டும் தண்ணீரின் சப்தம் - ஒரு லைவ் ரிப்போர்ட்
சென்னையில் நேற்று பெய்த பேய் மழை காரணமாக அடையாறு கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை : சென்னையில் நேற்று இரவு பெய்த தொடர்மழையால் அடையாறு கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்மட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதை அந்தப் பகுதி மக்கள் நேரில் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதோடு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்று இரவு பேய் மழை பெய்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பதிவாகியது.

மாலை முதல் கொட்டிடித் தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஓட வழியின்றி தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்தனர். இதே போன்று பொதுப் போக்குவரத்தான பேருந்து, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாலை முதல் மழை ஓயத் தொடங்கியதால் மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராமாபுரம் அடையாறு கால்வாய் பகுதியில் தண்ணீர் குறைந்த அளவிலேயே இருந்தது.
இந்நிலையில் நேற்று பெய்த மழையால் நந்தம்பாக்கம், பட்ரோடு, மீனம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து அடையாறு கால்வாய் வழியாக செல்கிறது. இதனால் அடையாறு கால்வாயில் நீரின் வரத்து படு வேகமாக உள்ளது.
அடித்து பாய்ந்து வரும் நீரின் சப்தம் மிரட்டும் வகையில் இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் நீரின் அளவை அவ்வபோது வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் இந்த அடையாறு கால்வாய் வழியாக பெருமளவில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் சென்னை நகரமே பாதிக்கப்பட்டது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் இன்னும் வெளியேற்றப்படாத நிலையில் மழை நீர் மட்டுமே இந்த அடையாறு கால்வாய் பகுதியாக செல்கிறது.












Click it and Unblock the Notifications