சென்னை விருந்தினர் இல்லத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மர்ம சாவு!
சென்னை: சென்னையில் பணியாற்றிய கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (33). 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரியான இவர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) அந்தஸ்தில் இருந்தார்.
மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டார். சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்து வந்தார். சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் ரூம் நம்பர்-104ல் ஹரிஸ் தங்கி இருந்தார்.
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்ற அவர் இன்று காலை நீண்ட நேரம் வரை வெளியே வரவில்லையாம். எனவே சந்தேகத்தின்பேரில் ஹரிசின் கார் டிரைவர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டும் மறுமுனையில் எடுக்கவில்லை.
எனவே, விருந்தினர் மாளிகை ஊழியர்கள் ஹரிஸ் தங்கிருந்த அறை ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கையில் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த எழும்பூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2009ம் ஆண்டில் இவருடன் பணயில் சேர்ந்த மற்ற போலீஸ் அதிகாரிகள் அனைவரும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள நிலையில் ஹரிஸ் மட்டும் ஏ.எஸ்.பி.யாகவே பணியை தொடர்ந்து உள்ளார். கன்னடத்துக்காரர் என்பதாலும், இங்கு அவருக்கு ஜாதி, அரசியல் பலம் இல்லை என்பதாலுமே பதவி உயர்வு தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஹரீஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும் எனவே அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருக்கலாம், அல்லது விஷம் குடித்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பிறகு உண்மை தெரியவரும். ஹரீஷுக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த வாரம்தான், பெங்களூர் அடுத்த ஹோசக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.