பிக்பாஸ்.. இது ரியாலிட்டி ஷோவா, இல்லை ரீல் ஷோவா? எத்தனை லாஜிக் ஓட்டைகள் பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதங்கள் நடந்து வருகின்றன.
ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இதற்கு முன்பும் அத்தொலைக்காட்சி இப்படி விவாதங்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் ஹிட் அடித்துள்ளன. அழுகை, மகிழ்ச்சி, கோபம் என நவரசங்களையும் பங்கேற்பாளர்கள் வழங்கி, வாசகர்களை கட்டிப்போடுவது வழக்கம்.
ரியலா, ரீலா?
அந்த வரிசையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவி கையில் எடுத்துள்ளது. இது பெயருக்கான 'ரியாலி'ட்டி ஷோ அல்ல, நிஜமாகவே ரியலாக நடக்கும் காட்சிகளைதான் ஷோவாக காட்டுகிறோம் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரம். இதற்கு முன்பு பல்வேறு மொழி சேனல்களும் அப்படித்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பின.
வாசகர்கள் அலர்ட்
ஒருநாள் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் சுவாரசியங்களை மட்டும் எடிட் செய்து இரவு 9 மணிக்குமேல் விஜய் டிவி ஒளிபரப்புவதாக அறிவிக்கிறது. அந்த வீட்டில் நிலையாக 30 காமிராக்கள் பொருத்தப்பட்டு, மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. ஆனால் வீட்டுக்குள் நடப்பதெல்லாம் இயல்பாக இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் பிக்பாஸை கடந்த சில தினங்களாக பார்க்கும் வாசகர்கள்.
கை வந்துச்சே
உதாரணத்திற்கு, 'குண்டு ஆர்த்தி' கதவை திறக்க முடியாமல் திறந்தபோது, அறைக்குள் இருந்து, ஒரு கை நீண்டு அவர் கதவை திறக்க உதவியது. இவ்வாறு செய்தது, பிக்பாஸ் செட் உதவியாளர்தான் என்ற குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. பங்கேற்பாளர்கள் 15 பேருக்கு மட்டுமே செட்டுக்குள் அனுமதி என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காமிராக்கள் நகருகிறதாம்
அதேபோல கேமராக்கள் அனைத்தும் நிலையானவை என கூறப்பட்ட நிலையில், சில காட்சிகளின்போது காமிரா நகர்வதை வாசகர்களால் கவனிக்க முடிந்ததாக தெரிவிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேவையானதை செய்கிறார்கள்
வீட்டில் தினமும் சென்டிமென்ட், கோபவாக்குவாதங்கள் நடப்பது இயல்புக்கு மாறாக உள்ளது. அதிலும் ஜூலியானாதான் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரை சுற்றியே காட்சிகள் காட்டப்படுகிறது. அவரும் சென்டிமென்ட்டாக பேசுகிறார், ஜல்லிக்கட்டு பற்றி உரையாடுகிறார், அழுகிறார், எது தேவையோ அது எல்லாவற்றையும் செய்கிறார்.
தேர்ந்தெடுத்த நாடகம்?
மேற்கண்ட காட்சிகளையெல்லாம் வைத்து பார்த்தால், இது ரியாலிட்டி ஷோ இல்லை, ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்து நடக்கும் நாடகம்தான் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.