தமிழக காய்கறிகளுக்குத் தடை... கேரளா அண்டை நாடா? அண்டை மாநிலமா? - விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ள தென்று பொய்யான குற்றச்சாட்டை கூறி கேரளா தடை விதித்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளா என்ன அண்டை நாடா? அண்டை மாநிலமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திய பிறகு, புதிய அணைகட்ட பகீரத முயற்சிகளை மேற்கொண்ட கேரள அரசு, அதில் பலமுறை மூக்குடைபட்டதால் ஏதாவதொரு வகையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டுள்ளது.
அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதென்ற பொய்யான குற்றச்சாட்டு. கேரளா தொடர்ந்து அதை சொல்லி வருவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
தமிழக காய்கறிகள்
தமிழ்நாட்டில் அதே காய்கறிகளை உட்கொள்ளும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, அதனால் யாரும் இறக்கவும் இல்லை. இது குறித்து வேளாண்மை பல்கலை கழகமும், உணவு பாதுகாப்பு கழகமும் பல்வேறு ஆய்வுகள் செய்து உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவ்வித நச்சுத்தன்மையும் தமிழக காய்கறிகளில் இல்லை என்று திட்டவட்டமாக கூறியும், கேரள அரசு தமிழக விவசாயிகளை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆய்வு சான்றுகள்
நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப்படாத வகையில் தேசிய ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்ட சான்றுடன் வருகின்ற காய்கறி வாகனங்களை மட்டுமே இனிமேல் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுமென்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே இதை காண முடிகிறது. கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலமா? இல்லை அண்டை நாடா என்கின்ற சந்தேகம் எழுகிறது.
அரசு மெத்தனம்
தமிழக விவசாயிகளை காக்கவேண்டிய தமிழக அரசோ இப்பிரச்சனையில் மெத்தனமாக இருக்கிறதென்பதே உண்மை. இதுகுறித்து ஆலோசிக்க கேரள மாநிலம் சுகாதார செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது. ஆனால் தமிழக அரசு கலந்துகொள்ளாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தீர்வு காண வேண்டும்
முக்கியமான இந்த காலகட்டத்தில், கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாமா? பெயருக்கு ஓரிரு அதிகாரிகளை கேரளா மாநில சோதனைச்சாவடிக்கு அனுப்பி விபரம் கேட்பது சரியான அணுகுமுறையா? இத்துறையின் உயர் அதிகாரிகளை நேரில் அனுப்பி தீர்வுகண்டிருக்க வேண்டுமல்லவா?
முதல்வர் தலையிடுவாரா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கேரளாவோ அவர்களின் உணவுத்தேவைக்காக அனுப்புகின்ற காய்கறிகளையே சோதனை செய்கிறது.
கேரளா கழிவுகள்
தமிழக அரசின் அதிகாரிகளும், காவல்துறையினரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு, கேரளாவிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்காமல், தமிழக சோதனைச்சாவடிகளை திறந்து வைத்து வரவேற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சோதனைச்சாவடிகளை பலப்படுத்துக
எனவே, தமிழக - கேரளா சோதனைச்சாவடிகளை பலப்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை கொண்டுசெல்ல தேவையான உதவிகளை செய்யவேண்டும். அங்கிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.