சென்னையில் வசித்த ஐஎஸ் தீவிரவாதி... சந்தித்த மர்ம நபர் யார்? - தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் வசித்த ஐ.எஸ். பயங்கரவாதியைச் சந்தித்த மர்ம நபர் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கனகமலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரகசியக் கூட்டம் நடத்திய 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கேரள மாநிலம், திருச்சூர் வெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தா.சுவாலிக் முகம்மது என்ற யூசுப் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் சுவாலிக் முகம்மது, சென்னை கொட்டிவாக்கம் அருகே எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அன்னை சத்யா தெருவில், குணசேகர் என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சுவாலிக் முகம்மதின் மனைவி ஜிம்சினா, இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் மட்டும் இருந்தனர். ஜிம்சினாவிடம் சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சினா பயன்படுத்திய செல்போன், சுவாலிக் முகம்மது பயன்படுத்திய லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில், சுவாலிக் முகம்மது வீட்டுக்கு கடந்த வாரம் ஒரு நாள் நள்ளிரவில் மர்ம நபர் வந்தது தெரியவந்துள்ளது. அந்த மர்ம நபர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.