குறைந்த செலவில் செமி கிரையோஜெனிக் என்ஜின்... இஸ்ரோவின் புதுத் திட்டம்
நெல்லை: குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவுவதற்கு வசதியாக, கிரையோஜெனிக் என்ஜின் உந்து சக்தியைக் கொண்ட புதிய வகை என்ஜினை (செமி கிரையோஜெனிக் என்ஜின்) தயாரிக்க திட்டமிட்டுளளதாக இஸ்ரோ இயக்குனர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜிஎஸ்எல்வி டி 6 செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செயற்கை கோள் இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த பணி வரும் 27ம் தேதி தொடங்கும். இது தொலை தொடர்புக்கு பயன்படும். இந்த ராக்கெட்டில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.
சந்திராயன் 2 மறறும் வீனஸ் விண்கலம் தொடர்பாந நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயற்கை கோள்களை ஏவ பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்களில் எரிபொருளாக உபயோகப்படுத்தப்படும் திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனுக்கு அதிக செலவு ஆகிறது.
குறைந்த செலவில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் ரஷ்யா மறறும் இங்கிலாந்தில் உள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜனை பயன்படுத்தி குறைந்த செலவில் கிரையோஜெனிக் என்ஜினை எதிர்காலத்தில் இஸ்ரோவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆலோசனை மற்றும் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இஸ்ரோவில் மையத்திற்கோ அல்லது மகேந்திரகிரியில் உள்ள முக்கிய கட்டிடத்திற்கோ அல்லது செயற்கை கோளுக்கோ மறைந்த அப்துல் கலாம் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து வருகிறது. இதுகுறித்து பரிந்துரை செய்து அப்துல் கலாம் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.