தர்ம யுத்தம் வென்றது - அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தார் ஒதுக்குப்படுவது குறித்து ஒபிஎஸ்
சசிகலா குடும்பத்தார் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என நடத்திய தர்மயுத்தம் வென்றுள்ளது:வெற்றியடைந்துள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் ஒபிஎஸ், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம் என்கிற முடிவு எங்கள் தர்மயுத்தத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, ஒபிஎஸ் கோஷ்டி, சசிகலா கோஷ்டி என இரண்டாகப் பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்லும் முன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக்கினார்.
ஆனால் ஆர்கே நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது, இரட்டை இலையை மீட்க இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்தது என தினகரன் அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் மாட்டிக்கொண்டார்.
இந்நிலையில், தினகரனை அதிமுக கட்சியில் இருந்து ஒதுக்குகிறோம் என நிதியமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அறிவித்தார். மேலும் ஒபிஎஸ் கோஷ்டியுடன் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறினார்.
ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தாரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும், ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சி சென்று விடக் கூடாது என கூறிவந்தார். அவர் சொல்லிவந்தபடியே தற்போது சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் ஒதுக்குகிறோம் என எடப்பாடி தலமையிலான கோஷ்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், நாங்கள் நடத்திய தர்ம யுத்தத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி இது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கிவைத்ததன் மூலம் எங்கள் அறப்போராட்டம் வென்றுள்ளது என்று கூறினார். மேலும், இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.