இது தாமதமான முடிவுதான். ஆனால் விவேகமானது... சொல்வது திவாகரன் மகன் ஜெயானந்த்
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது என்பது தாமதமான முடிவுதான் ஆனால் விவேகமானது என்று சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலாவின் குடும்பத்தினரை விலக்கி வைப்பதாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதற்கு முதலில் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தாலும் நன்றி கூறி விலகி விட்டார். இதற்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவை போட்டுள்ளார். இது தாமதமான முடிவுதான் என்றாலும் விவேகமானது என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகள் மீண்டும் இணையப் போகின்றன. அதிமுகவிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று நிபந்தனை விதித்தார் ஓபிஎஸ்.

இதனையடுத்து அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவின் குடும்பத்தின் தலையீடு இருக்காது என்றும் அவர்களை ஒதுக்கி வைப்பதாகவும் அறிவித்தனர். இந்த முடிவுக்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டப் போவதாகவும் அறிவித்தார் டிடிவி தினகரன். ஆனால் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அதிமுகவை விட்டு விலகுவதாக கூறினார். தனக்கு இதுநாள்வரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு கிளம்பினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், ''அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு சரியானதே. இதை நாங்கள் சில மாதங்களுக்கு முன்பே கூறினோம். இது தாமதமான முடிவுதான். ஆனால் விவேகமானது'' என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே டிடிவி தினகரனின் ஆதிக்கம் கட்சியில் அதிகமாகவே இருந்தது. திவாகரன் அவரது வாரிசுகள், நடராஜன், அவரது உறவினர்கள் என அனைவரையுமே ஒதுக்கியே வைத்திருந்தார் டிடிவி தினகரன். இது சசிகலா குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது டிடிவி தினகரனே அதிமுகவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications