சேலத்தில் ரூ.20.5 லட்சத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி வீட்டில் ஐ.டி. ரெய்டு
சேலம்: சேலத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.20.5 லட்சம் ரொக்கத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
சேலம் குமாரசாமிப்பட்டி மெயின் ரோட்டில் கடந்த 26ம் தேதி இரவு அஸ்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தினர்.
அந்த காரில் இருந்த பெரமனூரை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளரும், பா.ஜ.க. இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளருமான அருண், அவரது நண்பர் சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த யுவனேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
காரை சோதனை செய்தபோது அதில் ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. அதில் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ரொக்கத்திற்கு உரிய கணக்கை காட்ட அருண் மறுத்ததையடுத்து அது மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அருணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
வாகன சோதனையில் சிக்கிய பணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.