ஜெ.வின் போயஸ் கார்டனில் ஐடி அதிகாரிகள் நள்ளிரவில் அதிரடி ரெய்டு- லேப்டாப், பென் டிரைவ்கள் பறிமுதல்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர்.
போயஸ் கார்டனில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வசித்த அறையில் சோதனை நடைபெற்றது.
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வசித்து வரும் அடையாறு வீட்டில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது. இதனையடுத்து அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த ரெய்டு நள்ளிரவு நீண்ட நேரம் நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போயஸ் தோட்ட வீட்டில் பூங்குன்றன் வசித்த அறையில் 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசி மகனுமாகிய விவேக்கும் உடனிருந்தார்.
இச்சோதனையின் போது ஒரு லேப்டாப், 4 பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா அறையில் இருந்து எலக்ட்ரானிக் கருவிகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை முதல் 5 நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்கள், ஜெயாடிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.