ரஜினிக்கு அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கும், நாட்டுக்கும் நல்லது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், மக்களுக்கும் கூட மிகவும் நல்லது என கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சூப்பர்ஸ்டார் ரஜினியை தங்கள் கட்சிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருவதை சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன. லிங்கா படத்திற்குப் பின் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிக்கலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினி பாஜகவில் சேர்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தி இந்து நாளிதழுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எல்லாருக்கும் பொதுவானவர்...
கேள்வி: நடிகர் ரஜினிகாந்தை இழுக்க பாஜக தலைவர்கள் முயற்சிப்பது குறித்து?
பதில்: ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர். அரசியலுக்கு அப்பாற்றபட்டு, தமிழக மக்களும், தலைவர்களும் அவரை நேசிக்கின்றனர். எனவே மதசார்பு கட்சியான பாஜகவுக்கு ரஜினி வரமாட்டார் என நினைக்கிறேன். தமிழக மக்கள் மதசார்பின்மையை எப்போதும் கடைபிடிப்பவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் அதை நிரூபித்து வருகின்றனர். இதை ரஜினி அறிந்திருப்பார் என நினைக்கிறேன்.

ரஜினியின் செல்வாக்கு...
கேள்வி: மோடியை விட ரஜினி செல்வாக்கு மிக்கவர் என்று நினைத்து அவரை பாஜக அழைக்கிறதா
பதில்: மோடி பிரபலமானவர் என்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. மோடி அலை என்பதே ஒரு மாயை. மோடியை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், இடைத்தேர்தலில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக தோற்று, காங்கிரஸ் எப்படி ஜெயித்தது.

அரசியல் பிரவேசம்...
கேள்வி: ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ரஜினியைப் பொறுத்தவரை, மக்கள் மத்தியில் பிரபலமானவர். நல்ல மனிதர். மதசார்பு கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அவரை நேசிக்கின்றனர். எனவே அவர் ஒரு கட்சிக்குள் தன்னை அடைத்துக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கும் நல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதிமுகவினரின் போராட்டங்கள்...
கேள்வி: ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்
பதில்: தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் எப்படியும் தண்டனை கிடைக்கும் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவரை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்கள் தன்னிச்சையாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பிரபலங்களால் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும்.

2ஜி ஊழலுக்கு பயந்தா..?
கேள்வி: 2ஜி ஊழல் வழக்குக்கு பயந்துதான், இந்தத் தீர்ப்பை திமுக விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறதே
பதில்: 2ஜி வழக்கில் நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கின் போக்கை பொறுத்துத்தான் இதில் தொடர்புள்ளவர்களின் நிலை குறித்து பேச முடியும். ஆனால் முதலில் மவுனமாக இருந்த திமுக தலைமை கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.

தமிழக அரசியல் சூழலில் மாற்றம்...
கேள்வி: ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறதே?
பதில்: அரசியல் வெறிறிடம் என்பதைவிட, தமிழக அரசியல் சூழல் மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. இதைப் பயன்படுத்தி, தமிழகத்தில் காமராஜர் காலத்தில் காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதுவரை காங்கிரசார் இதற்கு தயாரானார்களா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நேரத்திலாவது காங்கிரசை வலுப்படுத்த தலைவர்கள் தயாராக வேண்டும்.

குட்டிக் கரணம் போட்டாலும் முடியாது...
கேள்வி: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பிடிப்போம் என பாஜக உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்களே?
பதில்: அரசியல் கட்சிகள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்கள் கட்சியை வளர்க்கப் பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் குட்டிக்கரணமே போட்டாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications