'மேடி'யோடு ஜோடி சேர்ந்த தெம்பு... சென்னைக்கு வெளியே அரசியல் வலம் வரும் தீபா
கணவர் மாதவன் தன்னுடன் வந்து சேர்ந்த தெம்புடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவி தீபா சென்னைக்கு வெளியே அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.
அரியலூர் : அரசியலுக்கு வந்து 8 மாதங்களாகிவிட்டாலும் அறிக்கை, நிர்வாகிகள் சந்திப்பு என அனைத்தையும் சென்னையில் இருந்தே செய்து வந்த தீபா முதல்முறையாக தன்னுடைய கணவருடன் இணைந்த தெம்புடன் அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பக்கம் சிலரின் பார்வை திரும்பியது.
கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தொண்டர்கள் திநகரில் உள்ள தீபா வீட்டின் முன் கிடையாய் கிடந்தனர். ஆனால் தீபா தெளிவான முடிவு எடுக்காத நிலையில் அந்த கூட்டம் கலைந்தது.
பேரவை தொடங்கிய தீபா
பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளின் போது தனிக்கட்சி தொடங்குவதாக தீபா அறிவித்தார். தன்னுடைய பேரவைக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரும் வைத்தார். எனினும் அரசியலில் எதிர்பார்த்த அளவு அவர் தீவிரமாக செயல்படாததால் தொண்டர்கள் மத்தியில் புகழை இழந்தார்.
ஆதரவு இல்லை
இதனிடையே கணவர் மாதவனுடன் பிரிவு, சகோதரர் தீபக்குடன் மோதல் என்று அவரது சொந்த விவகாரங்கள் காரணமாகவும் தீபாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நேர்காணலுக்காக அவர் அறிவித்த தேர்விற்குக் கூட ஆட்களே இல்லாமல் போனது.
உதவிக்கு அழைத்த தீபா
மனஸ்தாபம் காரணமாக தீபாவைப் பிரிந்து அவரது கணவர் மாதவன் திநகர் வீட்டில் இருந்து வெளியேறி தனிக்கடசி அறிவித்தார். எனினும் போயஸ் கார்டன் இல்லத்தில் சகோதரர் தீபக்குடனான மோதலின் போதே தீபா, கணவர் மாதவனை உதவிக்கு அழைத்தார். உயிருக்கு பயந்திருந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கணவரை அழைத்ததாக கூறினார்.
மீண்டும் ஒன்றுசேர்ந்தனர்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தனது கணவர் மாதவனுடன் தீபா மீண்டும் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் சேர்ந்து சென்று ஜெயலலிதா சமாதியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
மாதவன் அரவணைப்பில்
தீபாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த டிரைவர் ராஜாவின் பிடியில் இருந்து தீபா விலகியதாக பலரும் கருதினர். மாதவன் தீபாவுடன் திநகர் வீட்டியே வசித்து வருகிறார், தற்போது தீபா எங்கு சென்றாலும் அவருக்கு மாதவனே கார் ஓட்டிச் சென்று உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார்.
சென்னைக்கு வெளியே அரசியல்
சென்னையில் மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருந்த தீபா முதன்முறையாக அரியலூர் சென்றுள்ளார். கணவர் மேடி வந்த தெம்புடன் அவர் திருச்சிக்கு விமானம் மூலம் சென்று அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதா வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தொண்டர்கள் மகிழ்ச்சி
கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கினாலும், தற்போது தீபாவிற்கு ஆதரவாக இருப்பதால் புதுத் தெம்புடன் அரசியல் களத்தை விரிவுபடுத்தியுள்ளார் தீபா. இது அவரது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது.