சென்னை போராட்டத்திற்கு வர விடாமல் தடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்கள் ஆங்காங்கே தடுத்துநிறுத்தப்பட்டதால் பல பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வேலூர் சுங்கச்சாவடியில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜூலை மாதம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னைனயில் இன்று இரண்டாவது கட்டமாக பேரணி நடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோட்டை நோக்கி பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், ஆர்ப்பாட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று 15 நிபந்தனைகள் ஆர்ப்பாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்களின் பேருந்து வேலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் ஜக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்வதாகக் கூறியும் போலீசார் ஆசிரியர்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாலாஜா சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்தினர்.
இதே போன்று திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.