ஜல்லிக்கட்டு : வாடிவாசலை தாண்ட தயாராகும் காளைகள்.... சிறப்பு பூஜையுடன் பயிற்சி ஆரம்பம்
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதை அடுத்து சிறப்பு பூஜைகள் போடப்பட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,
மதுரை: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.
மாணவர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியதை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, கொம்புகளை கூர் தீட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் சிறப்பு பூஜைகள் போடப்பட்டன.

காளைகளுக்கு பூஜை
திண்டுக்கல் அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு
நத்தத்தை அடுத்த கொசவபட்டியில் பிப்ரவரி 10ஆம் தேதியும் புகையிலைபட்டியில் 15ஆம் தேதியும் பில்லமநாயக்கன்பட்டியில் 22ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். போட்டியை காண மாணவர்களும், இளைஞர்களும் வரவேண்டும் என்பது கிராம மக்களின் கிராமமக்களின் கோரிக்கையாக உள்ளது.

காளைகளுக்கு செம கிராக்கி
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மதுரை, மேலூர், லால்குடி ஊர்களில் உள்ள காளை வளர்ப்போரிடம் காளைகளை வாங்க பேரம் பேசி வருகின்றனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் வரை விலை போவதாக காளை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

காளைகளுக்கு பயிற்சி
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளதை அடுத்து, காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாடிவாசல் செல்லும் மாடுபிடி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை காளைக்கு நடைபெற்ற பயிற்சியில், மாடிபிடி வீரர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

ரேக்ளாவிற்கும் தயார்
திருப்பூர், கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ரேக்ளா பந்தையம் நடைபெறும். இதற்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, களத்தில் ஓட விடுவது என பயிற்சிகள் களை கட்டியுள்ளன. சில ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தையங்கள் நடைபெற உள்ளதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications