நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு: ஜெ. அறிவிப்பு
சென்னை: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். குவிண்டாலுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் விவரம்:

நடப்பு காரீப் பருவத்துக்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின்
அறிவிப்புப்படி, சாதாரண நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.1,310 எனவும், சன்ன ரக நெல்லுக்கான விலை குண்டாலுக்கு ரூ.1,345 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மாநில அரசு நிர்ணயம் செய்யும் வகையில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்தாய்வுக்குப் பிறகு, நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசால்
நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையுடன் தமிழக அரசின் சார்பில் ரூ.50 வழங்கப்படும்.
மேலும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.1,345 என்ற தொகையுடன் கூடுதலாக மாநில அரசு சார்பில் ரூ.70 அளிக்கப்படும்.
அக்டோபர் 1 முதல்: மாநில அரசின் கூடுதல் தொகையையும் சேர்த்து சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,360-ம், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,415-ம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், நெல் விளையும் பூமியான காவிரி பாசனப் பகுதிகளில் தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரிப் பாசனப் பகுதி அல்லாத இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கவும் சம்பந்தப்பட் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகுவதுடன், அவர்களின் வாழ்வு மேலும் ஏற்றம் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், செ.தாமோதரன், செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications