அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 நிறைவேற்றம்: சென்னை பிரசாரத்தில் ஜெ. பேச்சு
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக அளித்த அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு செனனையில் பிரசாரம் செய்ய உள்ளார். ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா, கடந்த தேர்தலின்போது அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
23 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 203 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்றார்.
இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி சென்னை நகரில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
நாளை வடசென்னை
வடசென்னை தொகுதியில் நாளை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர், ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக சென்று திருவொற்றியூர் தேரடியில் பேசுகிறார். பின்னர், டோல்கேட், தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அவர் மணலி நெடுஞ்சாலை சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி இணைப்பு சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா, சத்தியமூர்த்தி நகரில் பேசுகிறார். பின்னர், எம்.கே.பி. நகர், மத்திய நிழற்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூர்த்திங்கர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா பெரவள்ளூர் சந்திப்பில் பேசுகிறார். அதன்பின்னர், பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்கிறார்.
திங்களன்று தென் சென்னை
பின்னர் திங்கள்கிழமையன்று தென்சென்னை தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர், காந்தி சிலை, சாந்தோம் நெடுஞ்சாலை, எல்.பி. ரோடு வழியாக சென்று பெருங்குடியில் கந்தன்சாவடி காளியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பேசுகிறார்.
அதன்பின்னர், டைடல் பார்க், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை வழியாக சென்று ஐந்து விளக்கு பகுதியில் ஜெயலலிதா பேசுகிறார். தொடர்ந்து, ஜோன்ஸ் ரோடு, கே.கே.நகர் பகுதி வழியாக செல்லும் அவர் எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் (100 அடி ரோடு) அருகே பேசுகிறார். பின்னர், உதயம் தியேட்டர், அரங்கநாதன் சுரங்கப்பாலம், நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகே பேசுகிறார். தொடர்ந்து, தேவர் சிலை, டி.டி.கே. சாலை வழியாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்கிறார்.
கருணாநிதி பிரசாரம்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று இரவு சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் பொதுக்கூட்ட பிரசார மேடையில் பேசுகிறார்.
20-ந் தேதி திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஆவடி பட்டாபிராம் சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 8 மணிக்கு வடசென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ராயபுரம் சுழல்மெத்தை சாலையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
21-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அண்ணாநகர், எம்.எம்.டி.ஏ. காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார். தேர்தல் பிரசாரத்திற்கான கடைசி நாளான 22-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதன்படி அன்று காலை 9 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர், 9.30 மணிக்கு திரு.வி.க.நகர் (பட்டாளம்), காலை 10 மணி- மத்திய சென்னை -வில்லிவாக்கம், அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகில், 10.30 மணி- தென்சென்னை- தியாகராயநகர், அசோக்நகர், புதூர், 11 மணிக்கு மத்திய சென்னை-ஆயிரம் விளக்கு, தாமஸ்ரோடு, ஆலயம்மன் கோவில் அருகில், 11.30 மணி- தென்சென்னை மைலாப்பூர் நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம்-சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணா தெருவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.