ஹஜ் புனிதப் பயணம்: இட ஒதுக்கீட்டை அதிகரிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 2014ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டி 13,159 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், இந்திய ஹஜ் கமிட்டி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 2,672 இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இதனால், ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்துக்கு கூடுதல் இடங்களை மத்திய அரசு வழங்கியதால், தமிழகத்தில் இருந்து 3,696 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர்.
எனவே, 2014ஆம் ஆண்டிலும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருப்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு கூடுதல் ஹஜ் புனிதப் பயணத்துக்கான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.