ஜெ.,கைரேகை வழக்கு... டாக்டர் பாலாஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுமா?
ஜெயலலிதா கைரேகை குறித்த வழக்கில் டாக்டர் பாலாஜி முன்னுக்குப்பின் முரணாக சாட்சி அளித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா கைரேகை சர்ச்சை வழக்கில் டாக்டர் பாலாஜி முன்னுக்குப் பின் முரனாக பதில் கூறி வருவதால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி கூடுதல் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடுத்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான மருத்துவர் பாலாஜி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற போது அந்த அறையில் சசிகலா இல்லை என்று தெரிவித்தார். மேலும், அடையாறில் தனது மகன் அபினவ் பெயரில் சொந்தமாக மருத்துவமனை இருப்பதாகவும் கூறினார்.
ஜெயலலிதாவின் கைரேகையை சான்றளிக்க சுகாதாரத் துறை செயலாளரிடமோ அல்லது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனிடமோ அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுக வேட்பாளர் சரவணனின் வழக்கறிஞர் சுமார் இரண்டரை மணி நேரமாக டாக்டர் பாலாஜியைக் குறுக்கு விசாரணை செய்தார். நேற்று வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் தொடங்கியதும் திமுக வேட்பாளர் சரவணனின் வழக்கறிஞர், மீண்டும் விசாரணையை தொடர்ந்தார்.
நீதிபதி அனுமதி அளித்த பின் மீண்டும் டாக்டர் பாலாஜியிடம் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார் திமுக வேட்பாளர் சரவணன் தரப்பு வழக்கறிஞர். அவர் கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை என்றும் எனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார் என்றால் அவரது விரல் சரளமாக முழுமையாக அசைவு கொடுத்திருக்கும். அப்படி அசைக்க முடிந்திருந்தால் கைரேகையை முழுவதுமாக உருட்டியிருக்கலாம். ஆனால், அவர் 27-10-16க்கு முன்பாகவே இறந்துவிட்டார். எனவே உயிரற்ற உடலில் இருக்கும் கை விரலின் ரேகையை உருட்டிய நபரால் முழுவதுமாக உருட்ட முடியாததால்... தொட்டு எடுத்திருக்கிறார்கள் என்று வாதிட்டார். இதை டாக்டர் பாலாஜி மறுத்தார்.
முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்ததால், மருத்துவர் பாலாஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்ய இருப்பதாக மனுதாரர் சரவணன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கைரேகை வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.