இலங்கை சிறையிலிருந்து 96 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை.. மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 96 தமிழக மீனவர்களை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்கக் கோரி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 4 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ள சமீபத்திய சம்பவம் குறித்து மிகுந்த மனவேதனையுடன் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துணிச்சலுடன் துன்புறுத்தி வருகிறார்கள்.
முதலாவது சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து எந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 13ம்ந் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து 3 மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்ற 23 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரவில் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்கக்கூடாது என்றும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக தூதரகம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் தொடர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதி வருகிறேன்.
13ம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட 4 மீன்பிடி படகுகள் உட்பட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 82 படகுகள் இலங்கையில் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன. நீண்டகாலமாக பிடித்து வைத்திருப்பதாலும், பயன்படுத்தப்படாமல் உள்ளதாலும், கடுமையான பருவநிலை காரணமாகவும் இந்தப் படகுகள் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டன.
எனவே, இந்தப் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் புதுப்பித்து விரைவில் தமிழக மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் தமிழக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாக் நீரிணை பாரம்பரிய மீன்பிடி கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.
அந்த உரிமை இலங்கை அரசால் அடிக்கடி மீறப்பட்டு வருகிறது. மீனவர்கள் சந்தித்து வரும் இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஒரே வழி, இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதன்மூலம் தமிழக மீனவர்களுக்கு தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தரமுடியும். இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையின் கீழ் நிலுவையில் உள்ளது.
1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்பாட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இலங்கை விவகாரத்தில், உங்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். நீண்டகாலமாக இருந்து வரும், மிகவும் உணர்வுபூர்வமானதும், தமிழகத்தின் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதுமான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையின் அராஜக நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் வகையில், தூதரகம் மூலமாக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, 13ம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட 28 தமிழக மீனவர்கள் மற்றும் 4 மீன்பிடி படகுகள் உட்பட 96 தமிழக மீனவர்களையும், 82 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.