ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: அப்பீல் வழக்கின் ஆவணங்கள் பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல்
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு வழக்கின் ஆவணங்கள் இன்று பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு கர்நாடக ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, இன்று கர்நாடக் ஹைகோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. பதிவாளரிடம் 2 லட்சத்து 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்கள் 686 தொகுதிகளாக பதிவாளரிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தரப்பு சார்பில் 174 தொகுதிகள், சசிகலா தரப்பில் 171 தொகுதிகளை கொண்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதாகரன் தரப்பில் 171 தொகுதிகள், இளவரசி தரப்பில் 170 தொகுதிகள் ஆவணம் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆவணங்களை தாக்கல் செய்தனர். மொத்த ஆவணங்களில் 1.7 லட்சம் பக்கங்கள் பத்திரக் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. 43 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெள்ளை காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
இதற்காக கடந்த 2 மாதங்களாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய மூத்த வக்கீல் குமார், வக்கீல்கள் செந்தில், அசோகன், ஆர்.அன்புக்கரசு, திவாகர், செல்வக்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த ஆவணங்களை நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆவணக்களை பதிவுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, அவற்றிற்கு உரிய எண்கள் வழங்க 2 நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, வரும் 17ம் தேதி முதல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.