அத்தை ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்த அண்ணன் மகன் தீபக்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவரது அண்ணன் மகன் தீபக் இறுதி சடங்குகள் செய்து கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தார்
சென்னை :சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு காலை முதல் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, 15 மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டு, கண்ணாடிப்பெட்டியில் மூடி பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனுப்பினர். நல்லடக்கம் செய்வதற்கு முன்பாக முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் , ஆளுநர், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல்காந்தி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதியாக ஜெயலலிதா உடலுக்கு அவரது குல பாரம்பரிய முறைப்படி இறுதி சம்பிரதாயங்கள் நடைபெற்றன. ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபக், தனது அத்தைக்கு சசிகலா உடன் இணைந்து இறுதி சடங்குகளை செய்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டது முதலே அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவுடன் இருந்தார் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக். அவர்தான் இன்று இறுதி சடங்கு செய்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.