தாதுமணல் விற்பனை... வைகுண்டராஜனுக்கு தேர்தல் அறிக்கையில் ஜெ., செக்?
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 'புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும். அரசே தாது மணல் எடுத்து விற்பனை செய்யும்' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால், மதுவினால் கிடைக்கும் வருமானம் தேவைப்படாது' என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மவுனம் சாதித்தது. திடீரென இப்படி அறிவிக்க காரணம் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
வைகுண்டராஜனுக்கு சொந்தமான நியூஸ் 7 தொலைக்காட்சியில் 'தேர்தலில் அ.தி.மு.கவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதால்தான் அ.தி.மு.க தலைமை இவ்வாறு செய்கிறது' என்பது வைகுண்டராஜன் தரப்பு கருத்தாக உள்ளது.
தாதுமணல் முறைகேடு
தென்மண்டல கடற்கரையோரங்களில் வெட்டியெடுக்கப்படும் இலுமனைட் உள்ளிட்ட தாதுக்களால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது அ.தி.மு.க அரசு.
வைகுண்ராஜனுக்கு அதிர்ச்சி
ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து சமர்பித்த அறிக்கையின் கதி என்னவானது என்பது யாருக்கும் தெரியாது. இதுவரையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'தாதுமணல் விற்பனையை அரசு ஏற்று நடத்தும்' என்ற அறிவிப்பு வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்பினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிரான கருத்துக்கணிப்பு
வைகுண்டராஜனுக்கு சொந்தமான நியூஸ் 7 தொலைக்காட்சியில் 'தேர்தலில் அ.தி.மு.கவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதால்தான் அ.தி.மு.க தலைமை இவ்வாறு செய்கிறது' என்பது வைகுண்டராஜன் தரப்பு கருத்தாக உள்ளது.
தேர்தல் நேர நாடகம்
இதுதொடர்பாக, கருத்து கூறியுள்ள வைகுண்டராஜன் தரப்பு வழக்கறிஞர், இது தேர்தல் நேரத்து நாடகம். இதை யாருமே நம்ப மாட்டார்கள். எங்கள் சமூகம் அவருக்கு எதிராக இருப்பதால், இதுபோல் செய்கிறார் என்கிறார்.
முறையாக செய்கிறோம்
தாதுமணலை அரசே ஏற்று நடத்த முடியாது. மாநில அரசால் இதில் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. நாங்கள் முறையாக தொழில் செய்து வருகிறோம். அப்படியிருக்க, இதுபோன்ற அறிவிப்புகள் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்பது வைகுண்டராஜன் தரப்பினரின் கருத்தாகும்.
ஏமாற்று வேலை
இந்தத் தேர்தலின் மிகப் பெரிய காமெடி இதுதான் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். கிரானைட், தாதுமணல் முறைகேட்டிற்கு முழுக் காரணமே தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான் என்று கூறும் ஜி.ஆர், இது அப்பட்டமான ஏமாற்று வேலை என்கிறார்.
கூட்டுக்கொள்ளை
22 வருடமாக நடந்து வந்த கிரானைட் முறைகேட்டில் 2001 முதல் 2006 வரையில் 77 குத்தகைகளுக்கு அரசாணை கொடுத்தது அ.தி.மு.க அரசு. அதேபோல், 2006 முதல் 2011 வரையிலான 68 குத்தகைகளுக்கு அரசாணை வெளியிட்டது தி.மு.க. இவர்கள் இருவரும் கிரானைட்டில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.
கொள்ளையடிக்க வாய்ப்பு
அரசு ஏற்று நடத்துவதன் மூலம், அவர்களிடம் கமிஷன் வாங்காமல் நேரடியாக கொள்ளை அடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். மணல் கொள்ளை போலத்தான் இதுவும். தாதுமணல், கிரானைட், மணல் கொள்ளை என எந்தக் கொள்ளையும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.
அறிக்கை எங்கே போனது?
'அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை' என்கிறார் சகாயம். தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி கொடுத்த அறிக்கை எங்கே போனது? இதுவரையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தாரா ஜெயலலிதா?
வைகுண்டராஜனுக்கு செக்
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு, முழுக்க முழுக்க வைகுண்டராஜனுக்கு செக் வைக்கும் வேலைதான். ஜெயா டி.வியின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தவர்தான் வைகுண்டராஜன். அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இப்போது நட்பு சுமூகமாக இல்லை.
5 ஆண்டுகளில் என்ன செய்தார்
இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா? இதுவரையில் வி.வி.மினரல்ஸ கம்பெனியிடம் அ.தி.மு.க கமிஷன் வாங்கிக் கொண்டு இருந்தது. இப்போது நேரடியாக மணல் கொள்ளை போல, கொள்ளை அடிக்கலாம் என நினைக்கிறார்.
கவர்ச்சி அறிவிப்பு
தாதுமணலை அரசு தாராளமான ஏற்று நடத்தலாம். ஆனால், இவர்கள் செய்தால் கொள்ளை மட்டும்தான் நடக்கும். வேளாண்மை வளர்ச்சி, தொழில்வளர்ச்சியில் அகில இந்திய அளவில் பின்தங்கியிருக்கிறோம். வளர்ச்சி அறிவிப்பை வெளியிடாமல் வெறும் கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா என்பது ஜி. ராமகிருஷ்ணனின் கருத்தாக உள்ளது.
சகாயம் ஐ.ஏ.எஸ்
இது போல கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி இயற்கை வளம் கொள்ளை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இதையடுத்து, சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்படும் கனிமவளங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, சகாயம் தலைமையிலான சட்ட ஆணையர் குழுவை அமைத்தார் தலைமை நீதிபதி கவுல்.
அறிக்கையின் நிலை என்ன?
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 21 கட்டங்களாக ஆய்வு செய்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார் சகாயம். இது பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது. அந்த அறிக்கையின் முடிவு என்னவானது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.
தாக்கத்தை ஏற்படுத்துமா?
தனக்கு எதிராக கருத்து கணிப்பு வெளியிட்டதால் தாது மணல் விற்பனை பற்றிய அறிவிப்பை கடைசியாக சேர்த்தார் ஜெயலலிதா என்றும் சிலர் கருத்து கூறியுள்ளனர். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 19ம் தேதியன்று தெரியவரும்.