உர தொழிற்சாலைகளுக்கான மானியத்தை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 2 உர தொழிற்சாலைகளுக்கு தரப்படும் மானியத்தை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 2 உரத்தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாற மத்திய ரசாயனத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
நாப்தா மூலம் தமிழகத்தில் உள்ள இரண்டு உரத்தொழிற்சாலைகளில் யூரியா உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகள் எரிவாயு இணைப்புக்கு மாறாவிடில் ஜூன் 30ஆம் தேதிவரை மட்டுமே மானியம் வழங்கப்படும் என ரசாயன அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு உரத்தொழிற்சாலைகள் எரிவாயு இணைப்புக்கு மாற வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்,
தமிழகத்தில் உள்ள இரண்டு உரத்தொழிற்சாலைகள் எரிவாயு இணைப்புக்கு மாற அவகாசம் தேவை. எரிவாயு இணைப்புக்கு மாறும் வரை மத்திய அரசு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் கூறியுள்ளார்.