காமன்வெல்த் விளையாட்டு போட்டி: "தங்க மகன்" சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு- முதல்வர் ஜெயலலிதா
சென்னை: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதலில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழக வீரர் சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. 71 நாடுகள் கலந்து கொண்டுள்ள இப் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்தியா பதக்க வேட்டையில் முன்னேறி வருகிறது.
5-வது நாள் போட்டியில் நள்ளிரவில் நடந்த பளுதூக்குதலில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அவர் மொத்தம் 328 கிலோ தூக்கினார். ‘ஸ்னாட்ச்' முறையில் 149 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 179 கிலோவும் அவர் தூக்கினார்.
இதில் ஸ்னாட்ச் முறையில் சதீஷ்குமார் 149 கிலோ தூக்கியது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நவ்ரு நாட்டை சேர்ந்த யுகோ பீட்டர் 148 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் பரிசு பெறுவது இதுவே முதல் முறை.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்.