மழை நிவாரணம் உயர்வு... கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு ஜெ. உத்தரவு
சென்னை: மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை அதிகரித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, கனமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் சில மாவட்டங்களிலும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இந்நிலையில் பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதம் அடைந்த குடிசைகள் போன்றவற்றுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருவமழை தீவிரம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை பருவமழை தொடர்ந்து நீடிக்கும். கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவிட்டு உள்ளேன்.
உரிய நிவாரண உதவி...
அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிர் இழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக்கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டு உள்ளேன்.
இழப்பீட்டு தொகை உயர்வு...
பருவமழை காரணமாக ஏற்படும் உயிர் இழப்பு, கால்நடை இழப்பு, சேதம் அடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டு தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டு உள்ளேன்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்...
அதன்படி, மழை காரணமாக உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.4 லட்சம், முழுவதும் சேதம் அடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு ரூ.95 ஆயிரத்து 100, முழுவதும் சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம், பகுதி சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100 மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண் எண்ணெய், பசு மற்றும் எருமை மாடு உயிர் இழப்புக்கு ரூ.30 ஆயிரம், ஆடு, பன்றி உயிர் இழப்புக்கு ரூ.3 ஆயிரம், கோழி உயிர் இழப்புக்கு ரூ.100 என நிவாரண உதவித்தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.
நிவாரண முகாம்கள்...
மேலும், வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்எண்ணெய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டு உள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.
ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரம்...
மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்து 500, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 410, நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.
கட்டுமரம் சேதம்...
முழுவதும் பாதிக்கப்படும் கட்டுமரம் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரம் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டுமரங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் எப்.ஆர்.பி. வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரையிலும் வழங்கப்படும்.
எந்திரப் படகுகளுக்கு...
சேதம் அடையும் எப்.ஆர்.பி. வல்லம் ஆகியவற்றுக்கு ரூ.20 ஆயிரம் என்ற வீதத்திலும், முழுமையாக சேதம் அடைந்த எந்திர படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் என்ற வீதத்திலும், பகுதி சேதம் அடையும் எந்திர படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் ரூ.10 ஆயிரம், படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு ரூ.5 ஆயிரம் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.
உத்தரவு...
பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.