மே தினம் :106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்த ஜெ.
சென்னை: அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தை முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புதன்கிழமை வழங்கினார்.
இதற்காக, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் துணை அமைப்பான அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 106 நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் வெளியிட்டார்.
நலிந்த தொழிலாளர்களுக்கு நலநிதி வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக, பிற்பகல் 1 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வந்தார்.
லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல் முறையாக கட்சி அலுவலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்ததால் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர், 106 நலிந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு நலநிதியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.