ஜெயலலிதா மறைவால் விஐபி அந்தஸ்தை இழந்த ஆர்.கே. நகர் தொகுதி... இடைத்தேர்தல் எப்போது?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றர். டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்ததை அடுத்து ஆர். கே. நகர் சட்டசபை தொகுதி விஐபி அந்தஸ்தை இழந்துள்ளது.
தற்போது ஆர். கே. நகர் தொகுதி காலியாக உள்ளது என்பது பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. தொகுதி காலியாக இருப்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியாகும்.
ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ மரணமடைந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி ஜூன் 5ம் தேதிக்குள் ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மே மாதம் இடைத்தேர்தல்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் என்பதால் மே மாத விடுமுறையில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஐபி அந்தஸ்து
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 2015ம் ஆண்டு மே மாதம் விடுதலையான ஜெயலலிதா, ஜூன் மாதம் ஆர். கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ஜெயலலிதா. இதனையடுத்து அந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றது.
ஜெயலலிதாவின் தொகுதி
ஒரு ஆண்டுக்குப் பின்னர், 2016ம் ஆண்டு சட்டசபை பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆர். கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்கள் பலரையும் எதிர் கட்சியினர் களமிறக்கினர். எனினும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார். 5 மாத காலத்திற்குள் அதாவது செப்டம்பர் 22ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இடைத்தேர்தல் எப்போது?
கடந்த 2 ஆண்டுகளில் 3வது சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கப் போகிறது ஆர்.கே. நகர் தொகுதி. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் கடந்த 2 ஆண்டுகாலமாக விஐபி அந்தஸ்துடன் இருந்த ஆர். கே. நகர் தொகுதி தற்போது தனது விஐபி அந்தஸ்தை இழந்துள்ளது. ஜெயலலிதா ஜெயித்த உடன் அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்களை அறிவித்தார். உடனுக்குடன் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இனி இது போல ஆர்.கே. நகருக்கு நல்லது நடக்குமா? என்பது அந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.