ஜெயலலிதா மீதான ரூ.2 கோடி கிப்ட் செக் வழக்கு - ஜனவரிக்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட ரூ. 2 கோடி பரிசுப்பொருள் வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு கி்ப்ட் செக்குகள் வந்தன. முதல்வராக இருப்பவர் இதை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் இதை முதல்வர் ஜெயலலிதா செய்யவில்லை என்று கூறி பின்னர் வந்த திமுக ஆட்சியின்போது வழக்குத் தொடரப்பட்டது.
ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதில் அழகு திருநாவுக்கரசு பின்னர் திமுகவுக்குப் போய் விட்டார். செங்கோட்டையன் மட்டுமே தொடர்ந்து அதிமுகவில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கில் 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், காலதாமதமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லாமல் காலம் தாழ்த்தி தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான விசாரணையை ஒத்திவைத்தனர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு மீண்டும் கோரிக்கை வைத்ததை அடுத்து ஜனவரி 3வது வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.