ஜெயலலிதா நலம்பெற அதிமுகவினர் அங்கப்பிரதட்சணம் : சென்னைக்கு வந்த அர்ச்சனை குங்குமம்
சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு அந்த குங்குமம் சென்னையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டது. அந்த குங்குமம் சசிகலா மூலமாக முதல்வருக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா பூரண குணம் பெறவேண்டி, நேற்று மாலை தமிழகம் முழுக்க உள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அமைச்சர்கள் அனைவருமே சென்னையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயகுமார்
சென்னையில் உள்ள பிரசத்தி பெற்ற கோவில்களில் முதல்வர் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் உதயகுமார் சிறப்பு வழிபாடு நடத்தினார். வடபழனி முருகன் கோவிலில் எம்.எல்.ஏ கருணாஸ் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அமைச்சர்கள் வழிபாடு
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், காளிகாம்மாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்,கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில். திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அவர் குணமுடைய வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் வழிபாடு
மதுரை மீனாட்சி அம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், கோவை தண்டு மாரியம்மன், மருதமலை, காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இது போல கிறிஸ்தவ ஆலயங்களிலும், மசூதிகளிலும் முதல்வர் நலம் பெற சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளிலும் சி.எஸ்.ஐ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
அமைச்சரிடம் பிரசாதம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் ராமச்சந்திரனிடம் பல்வேறு கோயில்களில் இருந்து பூஜை செய்த பிரசாதம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அவரும் கோயில் குங்குமத்துடன் இரவு அப்பல்லோ மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். ஆனால் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லையாம்.
குங்குமப் பிரசாதம்
முதல்வர் இருக்கும் அறைக்குள் எங்களைக் கேட்காமல் எதுவும் கொண்டுபோகக் கூடாது. அவர்களுக்கு அது இன்ஃபெக்ஷனை உண்டாக்கிடும். என்று கோயில் குங்குமத்துக்கு தடை போட்டுவிட்டனர். அதனால் வேறுவழியில்லாமல் கொண்டுபோன குங்குமத்தை சசிகலாவிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன். அதை வாங்கி பய பக்தியுடன் நெற்றியில் வைத்துக்கொண்டாராம் சசிகலா.
அங்கப்பிரதசட்சனம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், எம்.எல்.ஏ.தென்னரசு தலைமையில், சிறப்பு பூஜைகள் நடந்தன. கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவர் மனோகரன் தலைமையில், 15 பேர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தமிழகம் முழுக்க பல்வேறு கோயில்களில் இருந்தும் பூஜை செய்த பிரசாதங்களையும், குங்குமத்தையும் போயஸ் கார்டனுக்கு அனுப்பியபடி இருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்!