இனி எப்போது அந்த சிரித்த முகத்தை காண்போம் அம்மா.... நினைவிடத்தில் கதறும் தொண்டர்கள்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதவாறு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு என்று செய்தி ஊடகங்களில் வெளியான ஞாயிறு இரவே சென்னையில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அப்பலோவில் குவிந்தனர். கவலைக்கிடம் என்ற செய்தி வெளியான உடனேயே வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர். திங்கட்கிழமை நள்ளிரவில் ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ அறிவித்தது. தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது.
ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கில் இருந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒரு நாள் போதுமா? பல லட்சக்கணக்கான தொண்டர்கள் , அம்மா.... அம்மா.. என்று கதறி அழுதனர். அம்மாவின் முகத்தைக் கூட பலரால் பார்க்க முடியவில்லை என்பதுதான் சோகம்.
ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாக நேரில் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத பலரும், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்தில் விடிய விடிய அழுதனர்.
தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி
இரண்டாவது நாளாக இன்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், எங்களுடைய அம்மாவுக்கு எப்படி இறுதிச் சடங்குகள் செய்வோமோ அதுபோல் செய்துவிட்டுதான் இன்று செல்வோம். எங்களால் அம்மாவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறுகின்றனர். நாங்கள் நேற்று இரவு வீடு செல்லவில்லை. திரும்பிச் செல்ல எங்களுக்கு மனசு இல்லை' என்று கண்ணீர் விட்டனர்.
பால் ஊற்றி வழிபாடு
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எங்கள் அம்மாவிற்கான இறுதி அஞ்சலி. இதை யாரும் தடுக்க கூடாது என்று கூறி பலரும் கதறி அழுதனர்.
People grieving at the spot where #Jayalalithaa was buried yesterday in Marina Beach, Chennai pic.twitter.com/Manuw4jhS9
— ANI (@ANI_news) December 7, 2016
மொட்டை அடித்து வழிபாடு
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முன்பாக மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள். நினைவிடத்தில் இருந்து நேராக போயஸ் தோட்டத்திற்கு சென்று ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்த்து கண்ணீர் மல்க அழுது விட்டு செல்கின்றனர். அம்மா இல்லாத தமிழ்நாட்டை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் அவர்களின் கருத்தாக உள்ளது. காலம்தான் லட்சக்கணக்கான தொண்டர்களின் காயத்திற்கு மருந்திட வேண்டும்.