முதல்வர் ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கொடநாட்டிற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். விமானம் மூலம் கோவைக்கு சென்று, அங்கிருந்து கொடநாட்டிற்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்கள் அங்கு தங்கியிருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும், கடந்த மாதம் 30ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் சென்றார். 10 நாட்கள் அங்கிருந்த அவர், கடந்த 10ஆம் தேதி மாலை போயஸ் கார்டன் திரும்பினார். திங்கட்கிழமையன்று தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, 440 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, இன்று காலையில் கொடநாட்டிற்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து கொடநாட்டிற்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்கள் அங்கு தங்கியிருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
அ.தி.மு.க.வின் 44ஆம் ஆண்டு விழா வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆண்டு விழா அன்று கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வந்து தொண்டர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த ஆண்டு சிறையில் இருந்த ஜெயலலிதா, அதிமுக அலுவலகத்திற்கு வர முடியவில்லை. இந்த ஆண்டு ஜெயலலிதா, கொடநாடு சென்றுள்ள நிலையில், 17ம் தேதி அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களைச் சந்திப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications